இரா.வினோத் அவர்களின் அயோத்திதாசரின் பவுத்தம் பதிவில் இருநது
நான் முதன் முதலாக பவுத்தர்களை சந்தித்தது கோலார் தங்கவயலில் தான். அவர்களை பார்த்ததும் கடும் அதிர்ச்சி. அதுவரை பவுத்தர்கள் என்றால் திபெத்தியர்களைப் போல இருப்பார்கள். காவி உடை உடுத்தி, மொட்டை அடித்திருப்பார்கள் என எல்லாரையும் போல நம்பிக் கொண்டிருந்தேன்.
ஆனால் தங்கவயல் பவுத்தர்கள் என்னைப் போல இருந்தார்கள். அதிகம் படித்தவர்களாக இருந்த போதும் அழகுத் தமிழ் பேசினார்கள். அதை விட அழகாக ஆங்கிலம் பேசினார்கள். அவர்கள் அம்பேத்கரைப் பின்பற்றி மதம் மாறியவர்கள் இல்லை. பூர்வீக பவுத்தர்கள். அவர்களின் மூதாதையரும் பவுத்தர்கள். என்னால் நம்பவே முடியவில்லை. அவர்களின் நடை உடை தோரணையை பார்த்து அதிர்ச்சி அடையாமலும் இருக்க முடியவில்லை.
'நீங்க எப்படி புத்திஸ்ட் ஆனிங்க?'னு கேட்ட போது அவர்கள் மிகுந்த மதிப்போடு உச்சரித்த பெயர், 'துரையார்'. பண்டிதமணி ஜி.அப்பாத்துரையாரை தங்கவயல் பெரியவர்கள் இன்றும் உயிர் சிலிர்க்க அப்படி தான் அழைக்கிறார்கள். அது அன்பு, நன்றி, பெருமிதம், உச்சபட்ச மரியாதையின் வெளிப்பாடு.
தென்னிந்திய பவுத்த சங்கத்தில் அயோத்திதாசருக்கு அடுத்த நிலையில் இருந்தவர் ஜி.அப்பாத்துரையார். பண்டிதருக்கு பின் தமிழன் இதழை தொடர்ந்து நடத்தியதிலும், பவுத்தத்தை பரப்பியத்திலும் இவருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தனித்துவம் மிக்க ஆளுமை. தமிழ் பண்டிதர், சிந்தனையாளர், சித்தமருத்துவர், எழுத்தாளர், பேச்சாளர், பன்மொழி வித்தகர் என பல முகங்கள் கொண்டவர். நவீன தமிழ் சமூகத்தின் சீர்திருத்தவாதிகளின் பட்டியலில் முதல் வரிசையில் இடம்பெற வேண்டியவர் ஜி.அப்பாத்துரையார்.
1914ல் அயோத்திதாசர் மறைந்த பின் தான் வசித்த சாம்பியன் ரீஃப் பகுதியில் பவுத்த சங்கம் நிறுவினார். நான் முதன் முதலாக பார்த்த பவுத்த சங்கம் அது தான். அரச மரத்தின் நிழலில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. புத்தர், அப்பாத்துரையார், அம்பேத்கர் படங்கள் வைக்கப்பட்டிருந்தன.
நூற்றாண்டுகளை கடந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் அந்த சங்கம் பெரிய கட்டிடமாக உருமாற்றப்பட்டிருக்கிறது. எழுதப்படாத வரலாறை சுமந்து நிற்கும் அக்கட்டிடத்தில் போய் நின்றாலே மனம் கணமாகி விடுகிறது.
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன் நானும் பிரபுவும் தேடி அலைந்து, முதல் முறையாய் இந்த பார்த்த கணம் கண் கலங்கி நின்றேன். கடந்த ஆண்டு அதை பார்த்த ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கமும் கண் கலங்கி நின்றார். வகுப்பெடுத்து பழக்கப்பட்ட அவருக்கு வார்த்தைகள் வரவில்லை.
அதுவொரு லட்சிய பேரியக்கத்தின் சாதனைகள் நிகழ்த்தும் உன்னதமான உணர்வு. அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
சாம்பியன் ரீஃப் சங்கத்தை பண்டிதர் பாணியிலே பள்ளி, படிப்பகம் என விரிவாக்கினார் அப்பாத்துரையார். பிற கிளைகளில் இல்லாத பவுத்த இளைஞர் கழகம், மகளிர் அமைப்பு உள்ளிட்டவற்றையும் உருவாக்கினார். தன் நண்பர் பி.எம்.ராஜரத்தினத்தின் சித்தார்த்தா அச்சகம் வாயிலாக, அயோத்திதாசரின் நூல்கள் மட்டுமல்லாமல் புத்தர் அருளறம் உள்ளிட்ட வெளியீடுகளையும் கொண்டுவந்தார்.
அப்பாத்துரையாரின் துணிச்சலான சமூக அரசியல் நடவடிக்கைகளால் தங்கவயலில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் புதிய எழுச்சி உருவானது. அதனால் ஈர்க்கப்பட்ட பெரியார் அவருக்கு நெருக்கமானார். அம்பேத்கர் 'இந்துவாக சாக மாட்டேன்' என அறிவித்த போது, அதை வரவேற்று பவுத்தம் தழுவுமாறு தந்தி அனுப்பினார்.
1954ல் அம்பேத்கர் தங்கவயல் வந்த போது அப்பாத்துரையாரை தேடி சாம்பியன் ரீஃப் பவுத்த சங்கத்துக்கு போனார். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு சங்கம், பள்ளி, படிப்பகம் ஆகியவற்றை சுற்றி பார்த்தார். சுமார் 2 மணி நேரம் அப்பாத்துரையாருடன் பவுத்தம் குறித்தும், தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்க செயல்பாடு குறித்தும் பேசினார்.
குறிப்பாக சங்கத்தை உருவாக்கிய அயோத்திதாசர் குறித்து நிறைய கேள்விகள் எழுப்பி இருக்கிறார். அப்போது தான் அப்பாத்துரையாருக்கு புரிந்தது.
அம்பேத்கர் தன்னை மட்டும் தேடிவரவில்லை. தன் குரு அயோத்திதாசரையும் தேடி வந்திருக்கிறார் என்று. அம்பேத்கரின் பணிகள் மீதான நம்பிக்கையின் காரணமாக, அப்பாத்துரையார் சித்தார்த்தா பதிப்பகம் வெளியிட்ட அயோத்திதாசரின் நூல்களை கொடுத்திருக்கிறார்.
அதனை மகிழ்வோடு பெற்றுக்கொண்ட அம்பேத்கர், 'நிறைய பேச வேண்டி இருக்கிறது. நான் மீண்டும் ஒருமுறை வருகிறேன்' என சொல்லி விடைபெற்றார். உடல் உபாதை, தங்கவயல் மக்களின் அறியாமை ஆகியவற்றால் அம்பேத்கர்
கடுப்பாக காணப்பட்டார். அந்த நிலையிலும் அவர் கூடுதல் மரியாதையுடனும், பொறுமையாகவும் நடந்து கொண்டது அப்பாத்துரையாரிடம் தான் அருகில் இருந்தவர்கள். அது அயோத்திதாசரை நேருக்கு நேர் எதிர்கொண்டதன் விளைவாக தான் இருக்கும்.
உண்மையில், அம்பேத்கருக்கு இதற்கும் முன்பே அயோத்திதாசரை நன்றாக தெரிந்திருந்தது. தன்னோடு நெருக்கமாக இருந்த தந்தை சிவராஜ், அன்னை மீனாம்பாள் மூலமாக அறிந்திருந்தார். இருவரும் பூர்வீக பவுத்தர்கள். பண்டிதரை நன்கு அறிந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள்.
அதே போல அயோத்திதாசரோடு இணைந்து செயல்பட்ட பேராசிரியர் லட்சுமி நரசுவை அம்பேத்கர் அறிந்திருந்தார். அவரின் 'Religion of the Modern Buddhist' நூலை படித்து வியந்த அம்பேத்கர், அந்நூலுக்கு புதிய முன்னுரை எழுதி மறுபதிப்பும் செய்திருக்கிறார். இதை 50 ஆண்டுகளுக்கு பின் அயோத்திதாசர் சிந்தனைகளை தொகுத்த ஞான அலாய்சியஸ் மீண்டும் பதிப்பித்திருக்கிறார்.
அம்பேத்கருடன் இருந்த வசந்த் மூன் எழுதிய 'பாபாசாகேப் அம்பேத்கர்' வரலாற்று நூலில், சென்னையை சேர்ந்த 'ஆபாதி தாஸ்' என்பவரின் பவுத்தம் தொடர்பான நூலை பற்றி எழுத அம்பேத்கர் திட்டமிட்டிருந்தார் என்ற தகவல் வருகிறது. சென்னையில் அந்த காலக்கட்டத்தில் ஆபாதி தாஸ் என்று யாரும் இருக்கவில்லை. அயோத்திதாஸ் என்பதையே வசந்த் மூன் தவறாக எழுதி இருக்கலாம் என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
இது தவிர அயோத்திதாசரின் கிளைகள் இருந்த ராயப்பேட்டை, பள்ளிக்கொண்டா, ரங்கூன் எல்லா இடங்களுக்கும் அம்பேத்கர் சென்றிருக்கிறார். கடைசியில் அவர் பவுத்தம் தழுவ தேர்வு செய்த நாக்பூரில் கூட அயோத்திதாசரின் கிளை இருந்திருக்கிறது. அதையும் அவர் அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இதுவரை அயோத்திதாசர் குறித்த அம்பேத்கரின் நேரடி எழுத்துகள் கிடைக்கவில்லை. அதே வேளையில் அவர் மராட்டியத்தில் எழுதி தொகுக்கப்படாமல் இருப்பவற்றை தொகுத்தால் அவை கிடைக்கலாம் என்கிறார் அறிஞர் ஆனந்த் டெல்டும்ப்டே.
ஆக, அம்பேத்கரின் பவுத்தம் நோக்கிய பயணத்தில் அயோத்திதாசர் கலங்கரை விளக்காக இருந்திருக்கிறார் என்பது பல வகைகளிலும் புலனாகிறது.
பண்டிதர் மட்டுமல்ல அவரை பின்தொடர்ந்தவர்களும் தம் லட்சிய பயணத்தை கைவிடாத சாம்பியன்களாக இருந்திருக்கிறார்கள் என்பதற்கு வாழும் சாட்சி 'சாம்பியன் ரீஃப் பவுத்த சங்கம்!'
இரா.வினோத்
படம்: சந்திரசேகரன் சீதாராமன்
14.5.2020